
ஜாதக பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து சேர்த்து வைப்பதுடன் பெற்றோரின் கடமை முடிந்துவிடுகிறது. வேறுபட்ட இரு குடும்ப பாரம்பரியங்களில் , சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்கள் இனி புதியதொரு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டாக வேண்டும். புது சூழல் , புது உறவுகள், புது பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அனுசரித்து பழகி கொள்வார்கள். அதன் பின் பல வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் புரிதலுடன் தான் வாழ்கிறார்கள் என்று முடிவிற்கு வந்துவிட முடியாது. பல உட்பூசல்கள் நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பது வெளியே பெரும்பாலும் தெரிவதில்லை.கணவன்/மனைவி ஒருத்தருக்கு கருப்பு நிறம் பிடிக்கும் , மற்றொருவருக்கு வெள்ளை நிறம்...இப்படி நிறத்தில் தொடங்கி பலவற்றிலும் விருப்பங்கள் எதிரும் புதிருமாக ! விருப்பங்கள் வேறுபட்டாலும் இருவரையும் இணைப்பது அன்பு என்னும் மகா சக்தி. ஆனால் இந்த அன்பை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளவேண்டும்...நம்ம மனைவி தானே என்று திருப்தி பட்டு கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை வெளிப்படுத்தியாக வேண்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்...!! ஆனால் எத்தனை தம்பதிகள் இதை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் விடை மிக சொற்பமே !!?
கணவன் மனைவி இருவரையும் சேர்த்து சொல்வதை விட இருவரின் மனநிலைகளை பற்றியும்
தனித் தனியா பார்க்கலாம் என்று நினைக்கிறேன் (அவ்ளோ மேட்டர் இருக்கு இதில.....!!
)
இன்றைய கணவர்கள் !?
இதை படிக்கிற ஆண்கள் தினசரி வாழ்கையில் எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு
நிமிடம் நிதானமாக யோசித்து பாருங்கள்...(எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் சரியா வருதானு
பாருங்க)
காலையில், சுடு தண்ணீர் காலில் கொட்டிய மாதிரி அரக்கபரக்க எழுவதில் இருந்து,
குளித்து அவசர அவசரமாக மனைவி கொடுக்கிற டிபனை (சிலர் சாப்பிடுவதும் இல்லை!)
நின்றுகொண்டே உள்ளே தள்ளிட்டு , வேலைக்கு கிளம்பி ஓடுவீங்க, அங்கே போயும் அந்த
வேலை, இந்த வேலைன்னு பார்த்துவிட்டு அதீத சோர்வா வீட்டுக்கு வருவீங்க. அந்த நேரம்
பார்த்து உங்கள் குழந்தை உங்களிடம் ஏதும் சொல்ல வந்தா 'அம்மாவிடம் போ, நான்
டயர்டா இருக்கிறேன்'னு சொல்லிட்டு...கொஞ்ச டிவி பார்த்திட்டு இரவு உணவை
முடிச்சிட்டு படுத்துவிடவேண்டியது...நடு இரவில் விழிப்பு வந்தால் , கண்டிப்பா
விழிப்பு வரும்... அப்போதுதான் அருகில் மனைவி ஒருத்தி இருப்பது நினைவுக்கு வரும்...
அப்புறம் என்ன... அந்த கடமையையும் ஒரு ஐந்து நிமிசத்தில முடிச்சிட்டு தூங்கிட
வேண்டியது.....இது தான் இன்றைய பெரும்பாலான கணவர்களின் வாழ்க்கை முறை !
எப்படிப்பட்ட விபரீத வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பது தெரியுமா
??
சிலரிடம் உங்க வாழ்க்கை எப்படி போகிறது என்று கேட்டால் போதும் வாய் வலிக்கும்
அளவிற்கு அளந்து விடுவார்கள்.எனக்கு பெரிய லட்சியம் இருக்கு, இதை இப்படி செட்டில்
பண்ணனும், அதை அப்படி செட்டில் பண்ணனும்', 'இரண்டு கிரௌன்ட்ல வீடு கட்டிட்டு
இருக்கிறேன்', அப்புறம் 'அதுல இன்வெஸ்ட் பண்ணி இருக்கிறேன்', 'இதில லோன் வாங்கி
இருக்கிறேன்', 'இன்சுரன்ஸ் இத்தனை லட்சத்துக்கு எடுத்து இருக்கிறேன்', என்று
போயிட்டே இருக்கும்......இதுவா வாழ்க்கை ? இதில் மட்டும் நிறைவு கிடைத்து விடுமா
?
இந்த மாதிரியான நபர்களை பொறுத்தவரை வாழ்க்கையின் அர்த்தம் இதுதான்.
பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டால் அனைத்தும் முழுமை அடைந்துவிடும் என்பது மாதிரியான
எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து இருக்கிறது.....! பொருள் பின்னே ஓடியே மனஅழுத்தம்
அதிகரித்து, தாம்பத்திய வாழ்வில் தோல்வியை தழுவி தங்களின் வாழ்நாட்களை கசப்பாக
கழித்து ஏனோ தானோவென்று முடித்துவிடுகிறார்கள்.....! ஆனால்
இவர்களின் மனகோளாருகளால் பாதிக்கப்படும் அவர்கள் குழந்தைகளின் நிலை
!!?
நான் என் மனைவியை அன்பாக தான் வைத்திருக்கிறேன் என்று ஒரு மிதப்பில் இருக்கும்
ஆண்கள் பலர் உண்டு...உண்மையில் எப்படி அன்பாக வைத்திருக்கிறீர்கள் ? எந்த விதத்தில்
? என்று கேட்டால் வரும் பதில் மிக அபத்தமாக இருக்கும்.....! அதனால் அவ்வளவையும்
இங்கே விரிவாக சொல்வதைவிட மிக முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே
குறிப்பிடுகிறேன்.....
'என் மனைவியை ரொம்ப காதலிக்கிறேன்', 'அவர்களை சந்தோசமாக வைத்திருக்கிறேன்'
என்று வரும் பதிலின் உண்மை தன்மை என்ன தெரியுமா? ஆண்கள் ஒரு அரைமணி நேரம் தங்களை
ரிலாக்ஸ் பண்ணி கொள்கிறார்கள் அவ்வளவே ! இதில் மனைவியின் சந்தோசம் எங்கே இருக்கிறது
? அல்லது ஒரு நாளாவது 'என்னுடன் இருக்கும் இந்த தனிமையான நேரம் உனக்கு சந்தோசத்தை
கொடுக்கிறதா என்று கேட்டு இருக்கிறீர்களா ?' கேட்டுபாருங்கள் , வரும் பதிலில்
உடைந்து போய்விடும் உங்களின் ஆண்மை !!
அந்த ஒரு அரைமணி நேரம் !!உங்களின் தேவையை தீர்க்கும் அந்த ஒரு அரைமணி நேரம்
நிச்சயம் பெண்ணிற்கு மகிழ்வை கொடுக்கவே கொடுக்காது. பின் என்ன செய்வது ? உங்களின்
அந்த அரைமணி நேரத்திற்கு முன் ஒரு அரைமணி நேரம் மனைவிக்காக ஒதுக்குங்கள், நீங்கள்
பெரிய அதிகாரியாக இருக்கலாம்,தொழில் அதிபராக இருக்கலாம்..... ஆனால் தனிமையான அந்த
நேரத்தில் உங்கள் மனைவியின் கணவன் மட்டுமே என்பது நினைவில் இருக்கட்டும்.'அன்று
வீட்டில்/அலுவலகத்தில் என்ன நடந்தது, அதை பற்றி சொல்லு' என்று கேளுங்கள்.உங்களின்
அன்றைய அலுவல் வேலை பற்றியும் சொல்லுங்கள், ஆமாம் அது எல்லாம் அவளுக்கு தெரியாது,
சொன்னாலும் புரியவும் புரியாது என்று எண்ணாதீர்கள்.
நீங்கள் கவிதைகள் எழுத தெரிந்தவராக இருந்தால் அதை பற்றி சொல்லுங்கள் உனக்கு
எழுத தெரியுமா என்று வினவுங்கள். அவளுக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை என்று
சப்பைக்கட்டு கட்டுவதை இனியாவது நிறுத்துங்கள்...இன்றைய இளம் மனைவிகள் பல திறமைகளை
உள்ளுக்குள் வைத்திருப்பார்கள் , வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்காததால் வெற்று
காகிதம் என்று அலட்சிய படுத்திவிடாதீர்கள்..... பல கவிதைகள் அந்த காகிதத்தில் எழுத
பட்டு இருக்கலாம் , ஆண் என்ற கண்ணிற்கு அது தெரியாமல் இருக்கலாம். யாருக்கு
தெரியும் அவை உங்களின் (கிறுக்கல்) கவிதைகளை விட அற்புதமாக இருக்கலாம் !!
விளையாட்டாய் கேட்டுப்பாருங்கள் 'என்னை பற்றி இரு வரி கவிதை சொல்' என்று
அசந்து போய் விடுவீர்கள் இத்தனை நாள் இதை இழந்துவிட்டோமே என்று வருந்தும் நிலைக்கு
தள்ளப்படலாம். ஒரு உதாரணத்துக்கு கவிதை என்று சொன்னேன், பேச்சு கொடுத்து பாருங்கள்
பல புதையல்கள் வெளிவரலாம். கருத்துக்களை பரிமாறுங்கள், அவர்களையும்
பேசவையுங்கள்...பேச்சின் ஊடே அவள் விரல் பிடித்து மெல்ல நீவி, 'இன்னைக்கு வேலை
ஜாஸ்தியாடா' என்று கேட்டுபாருங்கள், அந்த நொடி மிதக்க தொடங்குபவள் விடியும் வரை
உங்களில் கரைந்து மயங்கி கிடப்பாள். இது தாங்க பெண்மை. இத விட்டு விட்டு எத்தனை
கோடி பணம் தலையில் கொட்டினாலும் அந்த சந்தோசம் எல்லாம் சில நொடிகளில்
(நாட்களில்...!) முடிந்துவிடும். ஆனால் நான் குறிப்பிட்ட அந்த அரைமணி நேரம்
வாழ்வின் இறுதிவரை காதலால் நிறைத்து விடும்.
இந்த மாதிரி சில நிமிடங்கள் மனைவிக்காக ஒதுக்க முடியாதா என்று கேள்வி
கேட்கிறேன், ஒதுக்க முடியாதவர்கள் அதன் விளைவை கண்டிப்பாக சந்தித்து தான்
தீருவார்கள்...வழக்கம்போல அது என்ன விளைவு என்று யோசியுங்கள்...
No comments:
Post a Comment